ஈரோடு: கேர்மாளம் வனச் சாலையில் நிலவும் கடும் பனி மூட்டத்திற்கு இடையே திடீரென வந்து காரை வழி மறித்த யானையால் அதில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் நொக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவர் இன்று காலை சத்தியமங்கலத்திற்கு தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு காரில் கேர்மாளம் வனப்பகுதி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது கேர்மாளம் வனப்பகுதி சாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி வெண்நிற பனிமூட்டம் காரணமாக காரை மெதுவாக ஓட்டிச் சென்றார்.
இந்த நிலையில் வனச் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த தந்தத்துடன் கூடிய ஆண் காட்டு யானை திடீரென காரை வழி மறித்ததால் மோகன் குமார் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். உடனடியாக சடன் பிரேக் போட்டு அவர் காரை நிறுத்தினார்.
சுமார் அரை மணி நேரம் அந்த யானை காரை வழி மறித்து அப்படியே நின்றது. இதனால், வனப்பகுதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை வழிமறித்ததால் கார் நகர முடியாமல் நின்றது. பின்னர் மெதுவாக அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து கார் புறப்பட்டு சென்றது.