திருவள்ளூர்: போதையில் இரட்டைக் கொலை அரங்கேறிய ஒண்டிக்குப்பம் பகுதியில் வளர்ந்திருந்த கஞ்சா செடியை போலீசார் பறித்துச் சென்றதோடு, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பகுதியில் இளைஞர்கள் அதிகளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவதாகவும், இதனை காவல்துறை கண்டு கொள்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திருத்தணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞரை 4 சிறுவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை கடப்பதற்குள், கடந்த 17 ஆம் தேதி கஞ்சா போதையில் வந்த நபர்களால் 2 பேர் கற்களாலே அடித்து கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஒண்டிக்குப்பத்தில் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் கஞ்சா செடி வளர்ந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்த போலீசார், சாலையோரத்தில் ஒரு அடி உயரம் வளர்ந்திருந்த கஞ்சா செடியை அங்கிருந்து பிடுங்கிச் சென்றனர்.
தொடர்ந்து, கஞ்சா செடியை வேறு யாரேனும் வளர்த்து வருகிறார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.