ஈரோடு: கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய புகழ் பெற்ற சென்னிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூசத் தேர் விழா கடந்த 24 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்லக்கு சேவை முதல் காமதேனு வாகனக்காட்சி வரை 7 நாட்கள் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் தொடங்கியது. சப்பரத்தில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள், பூஜைக்குப்பின் தேரில் அமர வைக்கப்பட்டனர்.
காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா’ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து தேர் தெற்கு ராஜ வீதி வழியாக இழுத்துச் செல்லப்பட்டது. மேலும் பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வந்தும், வேல் அழகு குத்தியும், நடைபயணமாக வந்தும் முருகனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.