Surprise Me!

மயூரநாதர் கோயிலில் பரதநாட்டியம் ஆடிய சீன மாணவிகள்!

2026-02-13 6 Dailymotion

மயிலாடுதுறை: மயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்க விழாவில் சீன நாட்டைச் சேர்ந்த மாணவிகள் பரதநாட்டியம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், உள்ளூர் மட்டுமின்றி, சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் மலேசியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 500-க்கு மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று பரதம் ஆடுகின்றனர்.

நேற்று தொடக்கநாள் நிகழ்வில், சீனத் தலைநகர் பீஜிங்கை சேர்ந்த ஈஷா என்ற சீனப்பெண் நடத்தும் சங்கீதம் இந்தியா ஆர்ட்ஸ் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. இவர் பத்மஸ்ரீ லீலா சாம்சனிடம் பரதக்கலை பயின்றவர் ஆவார். இந்நிகழ்ச்சியில் ஈஷா மற்றும் சீன மாணவிகள் 7 பேர் பங்கேற்று முத்துசாமி தீட்சிதர் இயற்றிய ஆனந்தநடன பிரகாசம், கோபாலகிருஷ்ணபாரதி இயற்றிய நடனம் ஆடினர். மேலும், லால்குடி ஜெயராமனின் தில்லானா ஆகிய கீர்த்தனைகளுக்கு, உள்ளூர் பரதநாட்டியக் கலைஞர்களே வியக்கும் வகையில் அசத்தலாக நடனம் ஆடினர். இந்த நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ லீலா சாம்சன் உள்ளிட்ட பரத கலைஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.