கோயம்புத்தூர்: தவெக தலைவர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்ப வேண்டாம் என நடிகர் கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நடிகர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்துள்ள ’லீடர்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் திரையரங்கில் நடிகர் கூல் சுரேஷ் ரசிகர்களுடன் லீடர் படம் பார்த்தார்.
முன்னதாக, தியேட்டருக்கு நூதன முறையில் நுங்கு வண்டி ஓட்டியபடி நடனம் ஆடியபடி கூல் சுரேஷ் வந்தார். படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ், ”விஜய் சென்னையில் பிரச்சாரத்தை மாலை 6 மணிக்கே முடித்து கொண்டு சென்றுவிட்டார். இதுகுறித்து பலரும் பலவிதமாக அவதூறு பரப்பி வருகின்றனர்.
அவர் உடல்நலம் கருதியே சீக்கிரமாக பிரச்சாரத்தை முடித்திருப்பார். விஜய் குறித்து யாரும் அவதூறு பரப்ப வேண்டாம். விஜய் பிரச்சாரத்திற்கு சென்ற ஒரு பெண்ணின் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் காவல்துறையை குறை சொல்வது தவறு. நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நமது உடைமைகளை நாம்தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்” என கூல் சுரேஷ் கூறினார்.