Surprise Me!

கள்ளத்தனமாக மது விற்ற கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்

2026-04-27 5 Dailymotion

தருமபுரி: பென்னாகரம் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்த சந்துக்கடையை பெண்கள் அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சந்துக் கடைகள் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்க வலியுறுத்தி பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையில் எடுத்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில், பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில், நான்கு சந்துக் கடைகள் செயல்பட்டு வந்துள்ளது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் இளைஞர்கள், இன்று (ஏப்.27) அந்த 4 சந்துக்கடைகளையும் அடித்து உடைத்தனர். அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சந்துக் கடை விற்பனையாளர் கோவிந்தன், பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண்கள் கோவிந்தனை சுற்றி வளைத்து தாக்க முயற்சித்துள்ளனர். ஆனால், சுதாரித்துக் கொண்ட அவர், அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். இருந்தாலும் பொதுமக்கள் அவரை விடாமல் துரத்தி பிடித்து தாக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.