Surprise Me!

’நல்லா இருக்கணும் மகராசி’ - சிங்கப்பெண் படை பெண் காவலரை கட்டியணைத்த வாழ்த்திய மூதாட்டி

2026-06-14 15 Dailymotion

திருநெல்வேலி: நெல்லையில் ரோந்து பணியில் இருந்த சிங்கப்பெண் படையின் பெண் காவலரை கட்டியணைத்து ’நல்லா இருக்கணும் மகராசி’ என மூதாட்டி வாழ்த்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் விதமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி காவல் படையை சமீபத்தில் தமிழ்நாடு அரசு உருவாக்கியது. கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து, மாவட்டம்தோறும் சிங்கப்பெண் அதிரடிப்படையினரின் செயல்பாடுகள் தொடங்கியது. அந்த வகையில் நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் நின்ற பெண்களிடம் சிங்கப்பெண் படையினர் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, பெண்களின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அப்போது மூதாட்டி ஒருவர் பெண்களின் பாதுகாப்பிற்காக பெண்கள் கொண்டு சிறப்பு படை உருவாக்கப்பட்டதை அறிந்து நெகிழ்ந்தார். மேலும், பணியில் இருந்த பெண் காவலரின் கையை பிடித்துக்கொண்டு ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்துக் கொண்டார். தொடர்ந்து ’நீங்கள் நல்லா இருக்கணும் மகராசி’ என வாழ்த்தினார். 

இதன் பின்னர், வள்ளியூர் பகுதியில் ஜவுளிக்கடை உள்பட பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்களை சிங்கப்பெண் படையினர் சந்தித்து பேசினர். இதே போல் வாரச்சந்தை, கல்லூரி விடுதி, பேருந்து நிறுத்தம் என பல்வேறு இடங்களில் சிங்கப்பெண் படையினர் பெண்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.