தேனி: கும்பக்கரை அருவியில் 29 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் பாம்பார்புரம் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து, இந்த அருவிக்கு நீர்வரத்து வருகிறது. ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் வரும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
இதுபோன்ற சூழலில், நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்து, வறண்டு காணப்பட்டது. எனவே, கடந்த மே மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் பரவலாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால், 29 நாட்களுக்குப் பிறகு, இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவியைப் பார்வையிடவும் விதித்திருந்த தடையை தேவதானப்பட்டி வனத்துறையினர் நீக்கியுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.