சென்னை: முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தவெகவினர் பெட்ரோல் பங்க் அருகே பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் நாளை (ஜூன் 22) கொண்டாடப்பட உள்ளது. ஆனால், அவரது கட்சித் தொண்டர்கள் முன்னதாகவே கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில், சென்னை ஆவடி மாநகராட்சி அருகே தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆவடி எம்எல்ஏ ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் வெங்கடரமணன் கலந்து கொண்டார். அப்போது, சிறப்பு அமைப்பாளர்களை வரவேற்க வானவேடிக்கை வெடிக்கப்பட்டது.
அதில் ஒரு வெடி திடீரென தலைகீழாக கவிழ்ந்து வெடித்து, நாலாபுறமும் சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். அதுமட்டுமின்றி, விழாவில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் மீது பட்டாசுகள் பட்டன. குறிப்பாக பெண் காவலர் ஒருவர் மீது பட்டாசு விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே இருந்த பெட்ரோல் 'பங்க்'கில் தீப்பொறிகள் பறந்ததால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. அதனால் அங்கிருந்த போலீசார் பட்டாசை உடனடியாக அணைத்தனர். இதில், 2 பெண் காவலர்கள் மற்றும் தவெக பெண் நிர்வாகிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.