திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர், மாற்றுத்திறனாளி பயணியை அவமதிக்கும் நோக்கில் நடந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிரில்குமார். மாற்றுத்திறனாளியான இவர், மதுரை செல்வதற்காக ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட்டில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். தொடர்ந்து, அவரது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைக் காட்டி அதற்கான சலுகைக் கட்டணத்தில் நடத்துநரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
அந்த அடையாள அட்டையை வாங்க மறுத்த நடத்துநர் பிச்சைமணி, பயணியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, கடுமையான முறையில் விமர்சித்துள்ளார். குறிப்பாக, “இந்த அட்டையை பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் பயணிப்பீர்கள்? உன் முகத்திற்கும் இந்த போட்டோவிற்கும் சம்பந்தமில்லை என கூறி, டிக்கெட் தர மறுத்துள்ளார். மேலும், பேருந்திலிருந்து இறங்க வேண்டும்“ என்றும் கூறியுள்ளார்.
அதற்கு பயணி சிரில்குமார், "நான் ஒரிஜினல் கார்டு தான் தந்துள்ளேன். என்னால் இறங்க முடியாது. என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
டிக்கெட் தராமல் இழுத்தடித்ததோடு, அநாகரிகமாகப் பேசியதை சிரில்குமார் அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் பல்வேறு சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் வழங்க அரசு உத்தரவிட்ட நிலையில், களத்தில் உள்ள அரசு ஊழியரே இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நடத்துநர் பிச்சைமணி மீது அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.