Surprise Me!

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரேக்ளா ரேஸ்; முதல் பரிசு ரூ. 25,000

2026-06-27 2 Dailymotion

தேனி: முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மார்க்கையன்கோட்டையில் ரேக்ளா ரேஸ் போட்டி நடைபெற்றது. 

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 27) ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. மார்க்கையன்கோட்டையிலிருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் இந்த மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் கலந்து கொண்ட மாடுகள், பந்தய எல்லையை நோக்கிச் சீறிப்பாய்ந்து ஓடின.

மாடுகளையும், அவற்றை ஓட்டி வந்தவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். இப்போட்டியில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு, பெரியமாடு என ஆறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

மார்க்கையன்கோட்டையிலிருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்த விறுவிறுப்பான ரேக்ளா ரேஸை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் கண்டு களித்தனர்.