Surprise Me!

திடீரென 100 அடி உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்

2026-06-30 0 Dailymotion

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள கடல் திடீரென 100 அடி உள்வாங்கியதால், பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்பட்டது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அதுமட்டுமின்றி பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் இக்கோயில் விளங்கி வரும் நிலையில், தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். குறிப்பாக, திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

அதேபோல, இக்கோயிலில் அருகே அமைந்துள்ள கடலானது புனித தீர்த்தமாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கடலானது அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் உள்வாங்கிக் காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் பௌர்ணமி என்பதால் கடலானது சுமார் 100 அடி உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கடல் அலைகள் இன்றி குளம் காட்சியளித்தது. கடலில் புனித நீராட வந்த பக்தர்கள், வெளியே தெரிந்த பச்சைப் பாறைகள் மீது நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 

மேலும், பௌர்ணமியை முன்னிட்டு இரவு முழுவதும் கடற்கரையில் தங்கிய பக்தர்கள் அதிகாலையில் கடலில் புனித நீராடி விட்டு, ஆடைகளை கடற்கரை அருகில் போட்டு விட்டுச் சென்றதால், கடற்கரை முழுவதும் ஆடைகளாக காட்சியளிக்கிறது.