ஈரோடு: ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் ஆடு, காவல் நாய், மாடு போன்றவற்றை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத் துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் வனப்பகுதி அடர்ந்த காடாக இருப்பதால், யானை, சிறுத்தை,புலி, காட்டெருமை, மான்கள், செந்நாய்கள், கழுதைப்புலி என அரிய வகை விலங்குகள் உள்ளன. இந்த பகுதியில் சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதுடன் தோட்டத்தில் கட்டி வைக்கப்படும் ஆடு, மாடு ஆகியவற்றை வேட்டையாடி கொல்கின்றன.
இந்நிலையில், தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் டென்னிஸ் என்பவரின் வீட்டில் காவல் நாயை சிறுத்தை தாக்கி கொன்றது. அதே பகுதியில் பசுவன்னா என்பவரின் வீட்டில் ஆட்டை சிறுத்தை வேட்டையாடியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளதால், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர், ட்ரோன் மூலம் ஆய்வு செய்தபோது, செயல்படாத குவாரிகளில் 4 சிறுத்தைகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. சிறுத்தை நடமாடும் இடங்களை கண்காணித்து தானியங்கி கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.