மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு குப்பையில் குவியலாக கிடந்த 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசுத் துறை சார்ந்த சேவைகளை பெறுவதற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல் தங்களது பணிகளுக்காக தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்த சில பொதுமக்கள், அலுவலக வளாகத்தில் போதுமான கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், அலுவலகத்தின் முன்புறத்தில் உள்ள மறைவான பகுதியில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த குப்பைக் குவியலில் ஏராளமான புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் (EPIC) குவியல் குவியலாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அந்த வாக்காளர் அடையாள அட்டைகளை எடுத்து பார்த்தபோது, சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலரின் பெயர்களுடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்ததாக கூறப்படுகிறது. சிலர் தங்களது குடும்ப உறுப்பினர்களான மனைவி, மகன் உள்ளிட்டோரின் வாக்காளர் அடையாள அட்டைகளும் அந்த குப்பையில் கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
குப்பையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக முறையாக விண்ணப்பித்தோம். தேர்தல்களில் வாக்களிக்கவும், அரசு அலுவலகங்களில் அடையாள ஆவணமாக பயன்படுத்தவும் இந்த அட்டை மிகவும் முக்கியமானது. ஆனால் பல மாதங்களாகியும் எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை. தற்போது எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் தாலுகா அலுவலகம் முன்புள்ள குப்பையில் வீசப்பட்டு கிடப்பதை பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம்” என்றனர்.