Surprise Me!

பழனியில் ரோப்காரில் செல்ல இனி ஆன்லைன் முன்பதிவு

2026-07-06 0 Dailymotion

பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு டிஜிட்டல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக ரோப்காரில் பயணம் செய்ய ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது.

உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோயிலுக்குத் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து முடிக்காணிக்கை, அலகு குத்துதல், தங்கரதம் மற்றும் தங்கத்தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக அரசு முதன்மை கோயில்களில் ஆன்லைன் சேவைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பழநி முருகன் கோயிலில் கால பூஜைகளில் பங்கேற்பதற்கும், மின் இழுவை ரயில் (வின்ச்) பயணத்திற்குமான ஆன்லைன் முன்பதிவு வசதி சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

​அதன் தொடர்ச்சியாக, தற்போது ரோப்காரில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதி முழுமையாகத் தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தேர்வு செய்து, ஒரு நபருக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் சென்று வர 100 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

​இந்த ஆன்லைன் முன்பதிவு மூலம், நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 50 பேரும் என முதற்கட்டமாக அனுமதிக்கப்பட உள்ளனர். 

இந்த ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, கோயிலில் தினசரி நடைபெறும் 6 கால பூஜைகளில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு வசதியும் தற்போது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட கால பூஜைக்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.