திருப்பத்தூர்: விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த வாழை, மாமரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதகடுப்பு மலைக்கிராமத்தில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், நேற்று (ஜூலை 5) இரவு விவசாய நிலங்களில் புகுந்த ஒற்றை காட்டுயானை, அங்கிருந்த வாழை மரங்களையும், மாந்தோப்பிலிருந்த மாம்பழங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
அதனை கண்ட விவசாயிகள், இரவு முழுவதும் காட்டுயானையை டார்ச் லைட் அடித்து விரட்டியுள்ளனர். அதுதொடர்பான, வீடியோ வெளியாகியுள்ள நிலையில், ஒற்றை காட்டுயானை விவசாய நிலங்களுக்குள் வராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த ஒற்றை காட்டுயானையானது ஒற்றை கொம்புடைய டஸ்கர் காட்டுயானை என்றும், இந்த டஸ்கர் காட்டுயானை பல ஆண்டுகளாக ஜவ்வாது மலைத்தொடரில் சுற்றித்திரிவதாகவும், இதனால் மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, அதற்கு வயது முதிர்வு காரணமாகக் கண்பார்வை குறைந்துள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்கு விவசாய நிலங்களுக்குள் வராமல் காட்டிலேயே சுற்றி வந்த யானை, மீண்டும் விவசாய நிலங்களுக்குள் வந்துள்ளதாகவும் மலைக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.