Surprise Me!

மும்முனை மின்சாரம் கேட்டு விவசாயிகள் 'நூதன' போராட்டம்

2026-07-07 2 Dailymotion

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரம் கேட்டு தா.பழூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் கோடாலி கருப்பூர், சோழமாதேவி, அன்னகாரன்பேட்டை, இடங்கண்ணி, தென்கச்சி பெருமாள் நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பயிர் செய்து வருகின்றனர். மோட்டார் பாசனத்தை முழுமையாக நம்பி குறுவை பயிர் செய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  

இதனால் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சில நாட்கள் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.

இதனால் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி மீண்டும் கருகும் நிலை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சோழமாதேவி, கோடாலி கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தா.பழூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பட்டை நாமம் அணிந்தும், கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொளுத்தும் வெயில் என்று பாராமல் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என்று கூறப்படுகிறது.