நீலகிரி: குன்னூர் பட்டு உலகம் பொழுதுபோக்கு பூங்காவை புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னுார், கோத்தகிரி சாலை, ஸ்பிரிங் பீல்டு பகுதியில், பட்டு வளர்ச்சி துறை சார்பில், 5 ஏக்கரில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக பட்டு உலகம் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அன்றைய குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் கா. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மூலம் திறக்கப்பட்டது.
இந்த பட்டு உலகம் பொழுதுபோக்கு பூங்காவில் மல்பெரி இலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் புழுக்கள் முதல் பட்டு சேலை உற்பத்தி வரை தயாரிப்பு எந்திரங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பட்டுப்புழு வளர்ப்பு பட்டுக்கூடு அறுவடை பட்டு நெசவு வரை செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருவதை மாணவ மாணவியர் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர்.
ஆனால் தற்போது பல மாதங்களாக இந்த பூங்கா திறக்கப்படாமல் மூடி கிடைக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவ மாணவியர் இப்பகுதிக்கு வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இது குறித்து பூங்கா அலுவலரிடம் கேட்டபோது, “தற்போது பூங்காவில் சுற்றுசுவர் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அறைகளில் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் தற்போது செயல்படாமல் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
மேலும், பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் பட்டு உலகம் பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளது. இதனால் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் இந்தப் பூங்காவிற்கு அதிக அளவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.