கோயம்புத்தூர்: வனப்பகுதியில் தாயை விட்டு பிரிந்த குட்டி யானையை மீட்டு, வனத்துறையினர் முகாமுக்கு கொண்டுவந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று தாயை விட்டுப்பிரிந்து தனித்து விடப்பட்டது. அந்த குட்டி யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்ட நிலையில், முதன்மை வன பாதுகாப்பாளர் உத்தரவின் பெயரில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியான உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வனத்துறையினர் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனசரகம் டாப்ஸ்லிப் கோழிகமுத்தியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் கலீம், முத்து, சின்னத்தம்பி உட்பட 26 யானைகள் வனத்துறை அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மூலமாக நியமிக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மெய் அரசன் மற்றும் வன சரகர் வெங்கடேஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் யானைகளை பாதுகாக்கும் விதமாக தினசரி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தாயை விட்டு பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு இங்கு கொண்டுவந்துள்ளனர்.